ஷா ஆலம், ஆக 25- சாலை பரிசோதனை, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு
பணிகள் தொடர்பான செயலியை உருவாக்கிய நாட்டின் முதல் ஊராட்சி
மன்றமாக ஷா ஆலம் மாநகர் மன்றம் விளங்குகிறது.
ஏர்பன் எக்ஸ்புளோரர் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்
உருவாக்கப்பட்ட பேவ்மெண்ட்-ஏ1 எனும் இந்த முன்னோடி செயலித்
திட்டம் மாநகரிலுள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளைக்
கண்காணிக்கும் பணியை எளிதாக்கியுள்ளது என்று ஷா ஆலம் டத்தோ
பண்டார் டாக்டர் நோர் புவாட் அப்துல் ஹமிட் கூறினார்.
பொது மக்களுக்கு ஆக்ககரமான சேவையை வழங்கும் அதேவேளையில்
சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகள் தொடர்பான வாடிக்கையாளர்களின்
புகார்களுக்கு உடனடியாக பதிலளிப்பதிலும் நாங்கள் முனைப்பு காட்டி
வருகிறோம் என்று அவர் சொன்னார்.
சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகள் தொடர்பான பொது மக்களின்
புகார்களுக்கு விரைவாகவும் ஆக்ககரமான முறையிலும் தீர்வு
காண்பதிலும் இந்த செயலி பெரிதும் துணை புரியும் என்று நேற்று இங்கு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
முன்னாக, செக்சன் 13, ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கில் டாக்டர் நோர் புவாட்
அப்துல் ஹமிட்டும் ஏர்பன் எக்ஸ்புளோரர் சென். பெர்ஹாட் நிறுவனத்தின்
தலைமைச் செயல் முறை அதிகாரி அகமது புவாட் ஹம்சாவும் கலந்து
கொண்டனர்.
பொது புகார் மேலாண்மை முறையின் வாயிலாக செய்யப்படும்
புகார்களையும் ஒருங்கிணைக்கும் திறனை இந்த செயலி கெர்ணடுள்ளதாக
நோர் புவாட் தெரிவித்தார்.
விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக புகாரில் குறிப்பிடப்பட்ட
சாலையில் பழுது ஏற்பட்ட இடம் தொடர்பான துல்லியமானத்
தகவலையும் இந்த செயலி தெரிவிக்கும் என்றார் அவர்.








