ஷா ஆலம், ஆக 11- சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் (எஃப்.ஏ.எஸ்.)
ஏற்பாட்டில் நடைபெறும் 2023 பிரீமியர் லீக் கிண்ண போட்டியின்
இறுதியாட்டத்திற்கு ஷா ஆலம், தாமான் ஸ்ரீ மூடாவைச் சேர்ந்த புத்ரா
பெர்வீரா குழு தேர்வாகியுள்ளது.
இம்மாதம் 5ஆம் தேதி இங்குள்ள புக்கிட் ஜெலுத்தோங் அரங்கில்
நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் எஸ்.ஏ. யுனைடெட் குழுவை 3-0 என்ற
கோல் கணக்கில் தோற்கடித்த தன் மூலம் இறுதியாட்டத்திற்கு புத்ரா
பெர்வீரா குழு தேர்வானது.
எதிர்வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு 8.30 மணிக்கு சுபாங் ஜெயா,
அரேனா எம்.பி.எஸ்.ஜே. அரங்கில் நடைபெறும் இதன் இறுதியாட்டத்தில்
கிளானா யுனைடெட் குழுவை புத்ரா பெர்வீரா சந்திக்கவுள்ளது.
முற்றிலும் இந்திய விளையாட்டாளர்களைக் கொண்ட இக்குழு சிலாங்கூர்
லீக் போட்டியின் இறுதிச் சுற்றில் நுழைவது இதுவே முதன் முறையாகும்
என்று புத்ரா பெர்வீரா குழுவின் நிர்வாகியும் பயிற்றுநருமான ஆர்.எஸ்.
பிரகாஷ் கூறினார்.
பிரகாஷ் புத்ரா பெர்வீர் என முன்பு அழைக்கப்பட்ட இக்குழு சுமார் 150
குழுக்கள் பங்கேற்ற இப்போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று
இறுதியாட்டத்திற்கு தேர்வாகியுள்ளது பெருமைக்குரிய சாதனையாக
விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
கடந்த 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்குழு சிலாங்கூர் மந்திரி பெசார்
கிண்ணம், பேராக் மந்திரி பெசார் கிண்ணம் உள்பட பல மாநில மற்றும்
தேசிய நிலையிலான போட்டிகளிலும் டிவிஷன் 1 மற்றும் டிவிஷன் 2
போட்டிகளிலும் வென்று சாதனை படைத்துள்ளது. எனினும், பிரீமியர் லீக்
போட்டியின் இறுதியாட்டத்திற்குத் தேர்வானது இதுவே முதன் முறை
என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாட்டத்தில் வென்று கிண்ணத்தை வெல்வதற்காக குழுவின்
விளையாட்டாளர்கள் கடுமையான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு
வருவதாகவும் அவர் சொன்னார்.
இறுதிச் சுற்றில் பங்கேற்கும் புத்ரா பெர்வீரா குழுவினருக்கு ஆதரவு தந்து
அவர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக ரசிகர்கள் திரளாக இப்போட்டிக்கு
வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.








