ஷா ஆலம், ஆக 8- “புதிய சிலாங்கூர்“ எனும் தலைப்பிலான பெரிக்கத்தான்
நேஷனல் கூட்டணியின் தேர்தல் கொள்கையறிக்கையில் இலவச
சலுகைகளை மையப்படுத்திய முன்னெடுப்புகள் மட்டுமே முழுமையாக
உள்ளன. மாநிலத்தை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கு ஆக்கத்
திறனளிப்பதற்கும் தேவையான பொருள் பொதிந்த பொருளாதாரத் திட்டம்
எதனையும் அது கொண்டிருக்கவில்லை என்று மந்திரி புசார் கூறினார்.
மாநிலத்தைக் கைப்பற்றுவதற்கு அந்த எதிர்க்கட்சி கூட்டணி வழங்கியுள்ள
வாக்குறுதிகள் குறித்த முதல் தோற்றமே இவ்வாறாகத்தான் இருக்கிறது
என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் மந்திரி புசார் வேட்பாளரும்
மாநிலத்தின் முன்னாள் மந்திரி புசாருமான டத்தோஸ்ரீ முகமது அஸ்மின்
அலி பொருளாதார நிலைத்தன்மையைக் காட்டிலும் இலவச சலுகைகளை
வழங்குவதில் பேர் போனவர் என்பதால் இந்த அறிவிப்பு தமக்கு வியப்பை
ஏற்படுத்தவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.
டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் மந்திரி பெசாராக இருந்த போது மக்கள்
மையப் பொருளாதாரம் குறித்து அதிகம் பேசினார். அஸ்மின் மந்திரி
புசாரக ஆக பிறகு மக்கள் பரிவு குறித்து அதாவது மக்கள் தேவைகளை
நிறைவேற்றுவது குறித்து பேசினார்.
நான் மந்திரி புசாராக பதவியேற்றப் பிறகு இலவச சலுகைகளை
வழங்கும் நடைமுறையை முழுமையாக மாற்றினேன். நீடித்த
நிலைத்தன்மை மீது கவனம் செலுத்தினேன். நாம் செய்கின்ற எந்த
உதவியும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில்
உதவக்கூடியவையாக இருக்க வேண்டும் எனக் கருதினேன் என்றார் அவர்.
பெரிக்கத்தான் நேஷனல் தேர்தல் கொள்கையறிக்கை குறித்து பேசினால்,
அதில் பொருளாதார மேம்பாடு மற்றும் மீட்சிக்கான திட்டமிடல் எதுவும்
கிடையாது என அமிருடின் தெரிவித்தார்.
மீட்சிக்காக 20 லட்சம் வெள்ளி மட்டுமே ஒதுக்கப்படும் என பெரிக்கத்தான்
தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது. இதற்கு எதிர்மாறாக,
பக்கத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் தேர்தல் அறிக்கை மாநிலப்
பொருளாதார மீட்சிக்கான பல்வேறு முன்னெடுப்புகளை உள்ளடக்கியுள்ளது
என்றார் அவர்.








