கிள்ளான், ஆக 8- கோத்தா ராஜா தொகுதி மஇகா பொறுப்பாளர்களுடன்
சொந்தோசா சட்டமன்றத் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான்
வேட்பாளர் டாக்டர் குணராஜ் ஜோர் நேற்று சந்திப்பு நடத்தினார்.
அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த இரு பெரிய கட்சிகளின்
பொறுப்பாளர்கள் நடத்திய இந்தச் சந்திப்பு கோத்தா ராஜா தொகுதி
அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறும் மாநில தேர்தலுக்கான பிரசார
ஏற்பாடுகளைச் செய்து தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகத் தொகுதி
வேட்பாளரான குணராஜ் கூறினார்.
இந்த சிறப்பு சந்திப்புக்கு உறுதுணையாக இருந்த கோத்தா ராஜா தொகுதி
மஇகா தலைவர் சங்கர் ராஜ் ஐயங்கார் மற்றும் தொகுதி
பொறுப்பாளர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர்
சொன்னார்.
தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ள
நிலையில் தங்களுக்கு தோள் கொடுக்க வந்த ஐ.பி.எஃப், மை பிபிபி,
மக்கள் சக்தி கட்சியினருக்கும் மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி
பிரிவினருக்கும் நன்றியைப் புலப்படுத்திக் கொள்வதாக அவர் கூறினார்.
நாட்டிற்கும் இந்திய சமூகத்திற்கும் நன்மைகளைக் கொண்டு வருவதில்
இந்த இவ்விரு கட்சிகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு மிகவும்
அவசியமானதாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒத்துழைப்பின் வாயிலாக முடிவெடுக்கும் நடைமுறையை
விரிவுபடுத்தி மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் அடிப்படை
வசதிகளை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டங்களை விரைந்து
அமல்படுத்த முடியும் என்றும் குணராஜ் தெரிவித்தார்.








