செராஸ், ஆக.7- செமினி தொகுதிக்கான பாரிசான் நேஷனல் வேட்பாளர் வான்
ஸுலாய்கா அனுவார் பி.கே.ஆர். உலு லாங்காட் தொகுதித் தலைவர்களுடன்
அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. காலை
நேரங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல், தற்போது நிர்மாணிக்கப்பட்டு
வரும் சுகாதார கிளினிக், மறுநிர்மாணிப்புச் செய்யப்பட்டு வரும் காலைச் சந்தை
உட்படப் பல்வேறு பிரச்சனைகளைக் கேட்டறிந்த வான் ஸூலைக்கா, செமினி
சட்டமன்ற உறுப்பினராகத் தாம் வெற்றி பெற்றால் இப்பிரச்சனைகளுக்கு தீரவு காண
நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
இச்சந்திப்புக் கூட்டம் உலு லாங்காட் தொகுதிக்கான பி.கே.ஆர் தலைவர்
இராஜன் முனுசாமி தலைமையில் நடைபெற்றது. காஜாங் நகராண்மைக் கழக
உறுப்பினர்கள் இராமச்சந்திரன் அர்ச்சுனன், சந்திரன் இராமசாமி, செமினி கிராமத்துத்
தலைவர் நடேசன், உலு லாங்காட் பி.கே.ஆர்.தொகுதி உறுப்பினர் ரமேஷ்,
பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
நேற்று காலையில் செமினி சந்தை, கம்போங் பாரு சந்தை ஆகியவற்றுக்கு
வருகை மேற்கொண்டு அங்கு ஏற்படக்கூடியப் பிரச்சனைகளை வான்
ஸுலாய்கா கேட்டறிந்தார். சந்திரன் இராமசாமி மற்றும் இராமச்சந்திரன்
அர்ச்சுனன் ஆகியோர் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதே சமயம் சந்திரன் இராமசாமி மற்றும் இராமச்சந்திரன் அர்ச்சுனனின் முயற்சியில்
காஜாங் நகராண்மைக் கழகத்தின் வாயிலாகச் சாலை நிர்மாணிப்பு போன்ற
நிறைய செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின மாதமாக இருப்பதால் அதை முன்னிட்டு வாகனத்தில்
பயணம் செய்தவர்கள் உட்பட வந்திருந்த அனைவருக்கும் தேசியக் கொடி
வழங்கப்பட்டது. சந்திரனின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.








