ஷா ஆலம், ஆகஸ்ட் 6: சிலாங்கூர் மாணவர்களின் கற்றல் ஆற்றலை இன்னும் மேம்படுத்த ஐந்தாண்டுகளுக்குள் மொத்தம் 200,000 மாணவர்கள் சிலாங்கூர் இலவசப் பிரத்தியேக வகுப்பு திட்டத்தின் வழி கல்வி புகட்ட இலக்கு கொண்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.
இதுவரை மொத்தம் 63,000 மாணவர்கள் இத்திட்டத்தில் (PTRS), குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றுள்ளனர் என்றார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
."குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலாங்கூர் மாணவர்களுக்கு கூடுதல் கல்விக்கான அணுகல் விரிவுபடுத்துவதற்காக, 5 ஆண்டுகளுக்குள் சிலாங்கூர் இலவசப் பிரத்தியேக வகுப்பு திட்டத்தின் பங்கேற்பாளர்களை 63,000 பேரில் இருந்து 200,000 மாணவர்களாக அதிகரிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
"ஒற்றுமை அரசாங்கத்தின் திட்டங்களில் இதுவும் ஒன்று. அதை மக்கள் உணர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதை நாங்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவோம்" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முதல் இத்திட்டத்தில் இலவசக் கல்வியை வழங்குவது மட்டுமின்றி இலவச மதிய உணவும் வழங்கப்பட்டது என்றார்.
"மாணவர்கள் வசதியான சூழலில் தரமான கல்வியைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். நாங்கள் வழங்கும் சிலாங்கூர் ஒற்றுமையின் 5 தீர்மானங்களைப் பார்க்க www.kitaselangor.com.my ஐப் பார்வையிடவும்," என்று அவர் கூறினார்.








