கோம்பாக், ஆக 6- எதிர்வரும் மாநிலத் தேர்தலில் நாசகார மற்றும்
ஒற்றுமையை சீர்குலைக்கும் கட்சிகளை நிராகரித்து சிலாங்கூர்
காப்பாற்றுவதற்கு மாநில மக்கள் ஒன்று திரள வேண்டும் என மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் பிளவுபட்டும் சதா சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டும் இருந்தால்
மாநிலம் விரைவாக மேம்பாட்டையும் எழுச்சியையும் காண இயலாது
என்று சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அவர்
சொன்னார்.
பிரிவினை மற்றும் இன விவகாரங்களை எந்நேரமும் கவனித்துக்
கொண்டும் தீர்வுக்கான வழியை அல்லாமல் பிறர் குற்றங்களை மட்டும்
ஆராய்ந்து கொண்டும் இருந்தால் மாநிலம் வலுவுடன் இருக்காது
என்பதோடு அண்டை மாநிலங்களாலும் மற்றவர்களாலும் உயர்வாகவும்
பார்க்கப்படாது என அவர் குறிப்பிட்டார்.
பத்து கேவ்ஸ், கம்போங் சுங்கை கெர்த்தாசில் நேற்றிரவு நடைபெற்ற
சுங்கை துவா தொகுதி நிலையிலான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்
உரையாற்றிய போது அத்தொகுதி வேட்பாளருமான அவர் இவ்வாறு
கூறினார்.
மாநிலத்திலுள்ள பல்லின மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் மாநிலம்
நிலைத்தன்மையுடன் இருக்கவும் வேண்டும் என்பது மாநில மக்களின்
எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரச்சனைகளை உருவாக்குவது, அரசாங்கம் மற்றும் பிரதமரை
மாற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்ட எதிர்க்கட்சியினரின் விஷமப்
பிரசாரத்தில் மதிமயங்காமல் ஹராப்பான்-பாரிசான் நேஷனல்
வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும்படி அவர் பொது மக்களை கேட்டுக்
கொண்டார்.
தகவல்கள் ரீதியாகவும் தரவுகள் ரீதியாகவும் போட்டியிட முடியாததால்
அவர்கள் எதிர்வரும் தினங்களில் தீவிரப் போக்குடன் செயல்படக்கூடும்.
அவதூறு பரப்புவது, வசைபாடுவது, ஏளனம் செய்வது மட்டும்தான்
அவர்களிடம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.








