அம்பாங், ஆக 4- சீரான நிலைப்பாடு கொண்ட தலைவர்கள் இல்லாதது
மற்றும் சக கட்சிகளுக்குள் சதா முதுகில் குத்திக் கொள்ளும் போக்கு
ஆகிய காரணங்களால் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி
உறுதியற்றதாகவும் நாட்டை ஆள்வதற்குரிய தகுதியற்றதாகவும் உள்ளது
என்று டத்தோஸ்ரீ அமிருடின் கூறினார்.
சுய நலத்திற்காக அடிக்கடி கட்சித் தாவும் தலைவர்களை கொண்டு
உருவாக்கப்பட்ட கூட்டணியாக பெரிக்கத்தான் நேஷனல் விளங்குகிறது
என்று சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின்
தலைவருமான அவர் தெரிவித்தார்.
நமது எதிராளிகளும் (பெரிக்காத்தான் நேஷனல்) பெரிய கூட்டணியை
அமைக்கத் திட்டமிட்டனர். நேர்மை இல்லாத காரணத்தால் அவர்களால்
அவ்வாறு செய்ய இயலவில்லை. அவர்கள் அம்னோவிலிருந்து
கெஅடிலான் தாவி அங்கிருந்து மற்றோரு கட்சிக்கு மாறி பெர்சத்து என்ற
பெயரில் ஒன்றிணைந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
ஹராப்பான் கூட்டணியில் இருந்த போது அவர்கள் குழப்பத்தை
விளைவித்தனர். பின்னர் தேசிய முன்னணியுடன் இணைந்தனர். தேர்தலின்
போது தங்களுக்குள் மோதிக் கொண்டனர். தேர்தலில் வென்றப் பின்னர்
முன்பு சகாவாக இருந்த கட்சியின் முதுகில் குத்தியதோடு எதிர்க்கட்சி
உறுப்பினர்களையும் திருடினர் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றிவு லெம்பாங் ஜெயாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில்
உரையாற்றிய அமிருடின், எதிர்வரும் 12ஆம் தேதி மறவாமல் வாக்களிக்கும்
அதே வேளையில் பொறுப்புணர்வுமிக்க வேட்பாளர்களைத்
தேர்ந்தெடுக்கும்படியும் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.
இந்த நாட்டில் நமக்கு ஒருமைப்பாடும் கருத்திணக்கமும் அவசியமாகத்
தேவைப்படுகிறது. மக்களைப் பிளவுபடுத்த விரும்பும் தரப்பினர் சிலாங்கூர் மட்டுமின்றி வேறு எங்கும் தலைவர்களாக ஆக தகுதியற்றவர்கள் என அவர் சொன்னார்.








