ஷா ஆலம், ஜூலை 28- அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் கோத்தா கெமுனிங் தொகுதியில் புதுமுக வேட்பாளராக பிரகாஷ் த/பெ சாம்புநாதன் போட்டியிடுகிறார்.
ஜசெகவின் கோட்டையாக விளங்கும் இத்தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணியின் சார்பாக இம்முறை பிரகாஷ் களமிறக்கப்பட்டுள்ளார்.
பினாங்கு மாநிலத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த பிரகாஷ் தனது அயரா முயற்சியின் மூலம் கல்வியில் சிறந்து விளங்கி இன்று ஒரு வழக்கறிஞராக உயர்ந்து நிற்கிறார்.
கடந்த இருபது ஆண்டுகளாக ஷா ஆலம், செக்சன் 8இல் வசித்து வரும் இவர், தனது சட்டக் கல்வியை கடந்த 2008ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நோர்தம்பரியா பல்கலைக்கழகத்தில் முடித்தார். அதே ஆண்டில் வழக்கறிஞராக பணியாற்றுவதற்கான சான்றிதழைப் பெற்ற அவர், 2009ஆம் ஆண்டில் வழக்கறிஞர் மன்றத்தில் (பார் கவுன்சில்) வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞராக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
அரசியலைப் பொறுத்த வரை சிலாங்கூர் மாநில ஜசெகவின் சட்டப் பிரிவு தலைவராக இருந்து வரும் பிரகாஷ், டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.








