ஷா ஆலம், ஜூலை 29 - கிள்ளான் நகராண்மைக் கழகத்தை (எம்.பி.கே.) மாநகர அந்தஸ்துக்கு மேம்படுத்தும் முடிவு “கிரேட்டர் கிளாங் வேலி“ எனும் மகத்தான கிள்ளான் பள்ளத்தாக்கு நிர்வாகத்தை நிறுவும் சிலாங்கூர் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் சுபாங் ஜெயா ஆகிய நகரங்களுக்குப் பிறகு
சிலாங்கூரில் நான்காவது மாநகரமாகக் கிள்ளான் அரச நகரம் தற்போது உருவாகவுள்ளது
என்று ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங்கின் அறிவிப்பைத் தாம்
வரவேற்பதாக அவர் கூறினார்.
நான்கு ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கிய கிரேட்டர் கிள்ளான் பள்ளத்தாக்கு மலேசியா
மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஒரு பெருநகர மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
தொன்மை வாய்ந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கிள்ளான் நகரம்
பரந்த பொருளாதார வாய்ப்புகளைக் கொண்ட நிலையான நகரமாகத் தொடர்ந்து
வளர்ச்சியடைய இந்த மாநகர அந்தஸ்து உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கிரேட்டர் கிள்ளான் பள்ளத்தாக்கு உருவாக்கப்படுவதன் மூலம் பெட்டாலிங் ஜெயா முதல்
கிள்ளான் வரை வசிப்பவர்களுக்குச் சேவை வழங்குநர் என்ற முறையில் அரசாங்கம்
இந்த நான்கு ஊராட்சி மன்றங்கள் மூலம் சேவைத் திறனை மேம்படுத்தவும்
சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கவும் முடியும் என்று அவர் கூறினார்.
இது தவிர, இந்த கிரேட்டர் கிள்ளான் பள்ளத்தாக்கு அதிவேக இணையத்
தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான சேவைகளுக்கான சோதனைக் களமாக இருக்க
முடியும். குறிப்பாக 5G இணைய சேவையை இந்த நான்கு ஊராட்சி மன்ற
சேவைகளில் முழுமையாகப் பயன்படுத்தவும் இயலும் என்று அவர்
நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அமிருடின் குறிப்பிட்டார்.
கிள்ளான் நகரை ஒரு மாநகரமாகப் பிரகனடப்படுத்துவது தொடர்பான பரிந்துரை
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜிடம்
சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.








