ஷா ஆலம், ஜூலை 20- பொது மக்கள் தங்களுக்குப் பொருத்தமான
வேலைகளைப் பெறுவதற்கு உதவும் ஜெலாஜா ஜோப்கேர் பயணத்
தொடர் மாநிலத் தேர்தலுக்கு வழி விட்டு வரும் ஆகஸ்டு மாத இறுதியில்
மீண்டும் தொடரும்.
பெட்டாலிங் மாவட்டத்தில் தொடங்கும் இந்த வேலை வாய்ப்புச்
சந்தையில் சேவைத் துறை, உற்பத்தி மற்றும் பொருள் போக்குவரத்து
துறைகளில் 10,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்
என்று சிலாங்கூர் மாநில தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவு கூறியது.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் இளைஞர்களுக்கு மட்டுமின்றி
மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து வயதினருக்கும் வேலை
வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அப்பிரிவின் தலைவர் விஜயன்
சுப்பிரமணியம் கூறினார்.
ஆகவே, வேலை தேடுவோர் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்
கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட அவர், இந்த வேலை வாய்ப்புச்
சந்தைக்கான தேதி முடிவு செய்யப்பட்டவுடன் அது குறித்து பொது
மக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் இருபதுக்கும் மேற்பட்ட முதலாளிகள்
பங்கு கொண்டு தங்களுக்குத் தேவையான தொழிலாளர்களை நேர்முகப்
பேட்டியின் மூலம் தேர்ந்தெடுப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.
சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்
மேற்கொள்ளப்படும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் போக்குவரத்து,
சுகாதாரம் மற்றும் உபசரணைத் துறைகளிலும் வேலை வாய்ப்பு
வழங்கப்படும் என்றார் அவர்.








