ஷா ஆலம், ஜூலை 10- கடந்தாண்டு தொடங்கி ஏறக்குறைய ஒவ்வொரு
நாளும் மலிவு விற்பனையை ஏற்பாடு செய்து வரும் மாநில அரசுக்குப்
புக்கிட் சுபாங் வட்டார மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இந்த மலிவு விற்பனை தன்னைப் போன்ற இல்லத்தரசிகளின்
பொருளாதாரச் சுமையைப் பெரிதும் குறைக்க உதவுவதாக ஷாபினாஸ்
சாலே (வயது 43) என்ற குடும்ப மாது கூறினார்.
எங்கள் குடும்பத்தில் நான் வேலை செய்யவில்லை. என் கணவர் மட்டுமே
வேலை செய்கிறார். இந்த ஏசான் ரஹ்மா மலிவு விற்பனை எங்களுக்குப்
பெரிதும் உதவியாக உள்ளது என்று தாமான் புக்கிட் சுபாங் பாசார் மாலாம்
பகுதியில் இன்று நடைபெற்ற மலிவு விற்பனையின் போது அவர்
குறிப்பிட்டார்.
இன்று நான் 50 வெள்ளித் தொகையில் இரு கோழிகள், இரண்டு தட்டு
முட்டை மற்றும் ஒரு பாக்கெட் அரசியை வாங்கினேன். இப்பொருள்கள்
இந்த விலையில் வேறு எங்கும் கிடைக்காது என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கோழி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை
மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை தம்மைப் போன்ற
திருமணமாகாத இளைஞர்கள் நழுவ விடத் தயாராக இல்லை என்று
கைருள் ஷியாபிக் (வயது 23) கூறினார்.
ஒருவர் இரண்டு கோழிகளை மட்டுமே வாங்க அனுமதிக்கப்பட்ட
போதிலும் அதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக
நான் இங்கு அடிக்கடி பொருள்களை வாங்குகிறேன் என்றார் அவர்.
இதற்கிடையே, இந்த மலிவு விற்பனைக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து
அதிகரித்து வரும் வேளையில் இன்றைய நிகழ்வில் 300க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கும் வகையில் உள்ளது
என்று ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசுப் கூறினார்.
இந்த மலிவு விற்பனை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. வேலை
நாட்களில் நடத்தப்பட்ட போதிலும் வருகையாளர்களின் எண்ணிக்கையும்
தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார் அவர்.








