கிள்ளான், ஜூன் 14- ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்தியச் சமூக மற்றும்
தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா வாயிலாகக் கடந்த 2021 முதல்
2023ஆம் ஆண்டு வரை 639 இந்திய தொழில் முனைவோருக்கு 33 லட்சத்து
46 ஆயிரத்து 920 வெள்ளி மதிப்புள்ள வர்த்தக உபகரணங்கள்
வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டில் இதுவரை மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்ளைச் சேர்ந்த
175 பேரின் விண்ணப்பங்களை ஐ-சீட் அங்கீகரித்துள்ள வேளையில்
அவர்களில் கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 31 பேருக்கு இன்றைய
நிகழ்வில் 238,800 வெள்ளி மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்படுவதாகச்
சமூகவியல் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
வீ.கணபதிராவ் கூறினார்.
இன்று இங்குள்ள கிள்ளான் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தில்
நடைபெற்ற கிள்ளான் மாவட்ட நிலையிலான ஐ-சீட் மற்றும் வறுமை
ஒழிப்பு புளுபிரிண்ட் திட்ட விண்ணப்பாதாரர்களுக்கு வர்த்தக
உபகரணங்களை வழங்கும் நிகழ்வுக்குத் தலைமையேற்றப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம்
ஜமான்ஹூரி மற்றும் மேரு சட்டமன்ற உறுப்பினர் பாக்ருள்ராஸி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வர்த்தக உபகரணங்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு ஐ-சீட்
திட்டத்திற்கான உதவித் தொகை உச்ச வரம்பை 5,000 வெள்ளியிலிருந்து
10,000 வெள்ளியாக மாநில அரசு கடந்த 2022ஆம் ஆண்டில் உயர்த்தியதாகக்
கணபதிராவ் கூறினார்.
அதே சமயம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோரின் வருமான
வரம்பும் 2,000 வெள்ளியிலிருந்து 3,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
இந்த ஐ-சீட் திட்டத்தின் மூலம் இன்று வர்த்தக உபகரணங்கள்
பெற்றவர்கள் மத்தியில் பிரதிரூப மாற்றம் ஏற்பட்டு அவர்கள்
வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என தாம்
பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.








