கோல சிலாங்கூர் ஜூன் 14: கோலசிலாங்கூர் பாலாய் ராயா (தாமான் பெண்டாஹார) சமூக மண்டபத்தில் சித்தம் சிலாங்கூர் மற்றும் கோல சிலாங்கூர் நகராண்மை கழகம் (Zon 8) ஏற்பாட்டில் முக ஒப்பனை பயிற்சி பட்டறை ஒன்று நண்பகல் 1:30 - மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த பயிற்சி பட்டறைக்கு, சிறப்பு வருகையாளராக வருகை அளித்த கோல சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் புவான் ஜூவாரியா அவர்கள் பேசுகையில் இன்றைய நிகழ்வு தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இன்றைய பெண்கள், வீட்டு வேலைகளை பார்ப்பதும் பிள்ளைகளை கவனிப்பதுமாக மட்டுமல்லாமல் , வீட்டில் இருந்துக் கொண்டே உபரி வருமானத்திற்கான வழிகளை தேட ஆரம்பித்து உள்ளனர் என்பதை இது காட்டுகிறது.
இது பெண்களின் முன்னேற்றத்திற்கான நல்ல முன்னெடுப்பு, இது போன்ற பயிற்சி திட்டங்களில் கலந்து கொள்வது, அவர்கள் வெளி காற்றை சுவாசிக்க மட்டுமல்ல, வெளி உலகை அறிந்து கொள்ளவும், மற்றவர்களுடன் நல்லுறவை வளர்க்கவும் உதவும் என்றார்.
இந்த முக ஒப்பனை பயிற்சியை முழுமையாக கற்று கொண்டால் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்றும் அது அவர்களின் வருமானத்திற்கு உதவும் வகையில் இருக்கும் என்றும் கூறி பெண்களை உற்சாகப் படுத்தினார்.
அதனை தொடர்ந்து பி.கே.ஆர்.கோல சிலாங்கூர் கட்சியின் தலைவர் திரு.தீபன் சுப்ரமணியம் பேசுகையில் நமது இந்திய பெண்கள் வீட்டில் இருந்தே எப்படி அவர்களின் வருமானத்தை பெருக்கி கொள்வது என்பதனை தான் நீங்கள் இன்றைய முக ஒப்பனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
நாட்டில் பரம ஏழைகளாக அதிகமான இந்தியர்கள் இருப்பதை பிரதமர் அடிக்கடி நினைவு படுத்தி வருகிறார். இதில் பரம ஏழைகளின் வாழ்வை விரைவில் மேம்படுத்த அரசாங்கம் முழு கடப்பாடு கொண்டுள்ளதாகவும், இது போன்ற பயிற்சி திட்டங்கள் வழி, வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை நம் பெண்களுக்கும் உருவாக்கி கொடுப்பதும், குடும்ப வருமானத்தை உயர்த்துவது இத்திட்டத்தின் நோக்கம் என்றார்.
நாம் வெறுமனே வீட்டில் இருந்தால் அரசாங்கத்தின் முயற்சி பயனற்றதாகிவிடும். ஆகையால் வருமானம் ஈட்டுவதற்கு வழியை நாம் தேட வேண்டும், அதற்கு கை கொடுக்கவே இது போன்ற பயிற்சி பட்டறைகள் துணைபுரியும் என்றார்.
நீங்கள் முழு மனதுடன் இந்த முக ஒப்பனை பயிற்சியில் கலந்து கொண்டு கற்றுக் கொண்டால் தான் அதன் பலன் உங்களுக்குக் கிடைக்கும் எதிர்காலத்தில் நீங்களும் ஓர் கைத் தொழிலில் சிறந்து விளங்க முடியும் என்று திரு : தீபன் சுப்ரமணியம் சொன்னார்.
இறுதியாக கோலசிலாங்கூர் மாவட்ட நகராண்மைக் கழக உறுப்பினர் திருமதி. நந்தகுமாரி சிங்காரம் பேசுகையில் இந்த முக ஒப்பனை பயிற்சிக்கு சிரமம் பாராமல் வருகை அளித்த கோலசிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் புவான் ஜூவாரியா, மற்றும் வருகை அளித்த அனைவருக்கும் மற்றும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட 30 - பெண்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றார்.








