ஷா ஆலம், ஜூன் 13- கிள்ளான், லாமான் செனி சஃபாரியில் வரும்
ஞாயிற்றுக்கிழமை “ஊழல் இல்லாத மலேசியா“ எனும் கருப்பொருளில்
நடைபெறவிருக்கும் வாகனமில்லா தின நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும்படி
பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வையொட்டி ஐந்து கிலோ மீட்டர் நடைப் பயணம்,
சைக்கிளோட்டம், செனாம் ரோபிக், தீயணைப்புத் துறை மற்றும் ஊழல்
தடுப்பு பிரிவினரின் கண்காட்சி ஆகிய அங்கங்கள் இடம் பெறும் என்று
கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் வர்த்தக தொடர்புப் பிரிவு இயக்குநர்
நோர்பிஷா மாபிஷ் கூறினார்.
இந்த வாகனமில்லா தினத்தை முன்னிட்டு சிறார்களுக்காகப் புத்தக
கண்காட்சி, நடமாடும் நூலகம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் நகராண்மைக்
கழகம் ஏற்பாடு செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அதோடு மட்டுமின்றி தெனாகா நேஷனல் மற்றும் ஆயர் சிலாங்கூர்
நிறுவனங்களின் கண்காட்சியும் இந்த நிகழ்வில் இடம் பெறும் என்றார்
அவர்.
இந்த நிகழ்வு சீராக நடைபெறுவதை உறுதி செய்ய அரசு அருங்காட்சியகம்
எதிர்ப்புறம் மற்றும் ஜாலான் இஸ்தானா உள்பட துங்கு கிளானா
சாலையின் ஒரு பகுதி காலை 7.00 மணி முதல் 9.30 மணி வரை
போக்குவரத்துக்கு மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.








