ஸ்ரீ கெம்பாங்கான், ஜூன் 13- சிலாங்கூர் மாநில அரசின் மலிவு விற்பனை
தொடர்ந்து மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. இன்று இங்கு
நடைபெற்ற மலிவு விற்பனையில் இரண்டு மணி நேரத்திற்குள் 400
கோழிகள் விற்றுத் தீர்ந்தன.
இங்குள்ள தாமான் யுனிவெர்சிட்டி இண்டாவில் நடைபெற்ற இந்த மலிவு
விற்பனையில் கெம்போங் மீன், அரிசி, இறைச்சி, முட்டை, சமையல்
எண்ணெய் உள்ளிட்ட பொருள்களும் வெகு விரைவாக விற்கப்பட்டன.
மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான இந்த மலிவு விற்பனை
காலை 10.00 மணிக்கு ஆரம்பமான போதிலும் காலை 8.30 மணி முதல்
பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கத் தொடங்கியதாகச் சிலாங்கூர் மாநில
விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் சொத்துடைமை உதவி நிர்வாகி முகமது
ஓத்மான் சைட் கூறினார்.
இங்கு சந்தையை விட மிகவும் குறைவான விலையில் பொருள்கள்
விற்கப்பட்டன. அதிகமானோர் பயன் பெறுவதை உறுதி செய்வதற்காக
முடிந்தவரை கூடுதல் எண்ணிக்கையிலான பொருள்களை விற்பனைக்குக்
கொண்டு வந்தோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த மலிவு விற்பனையின் வழி மாநிலத்திலுள்ள 1 கோடியே 80 லட்சம்
பேர் பயனடைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கடந்த மே மாதம் 31ஆம் தேதி கூறியிருந்தார்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும்
இந்த மலிவு விற்பனையின் வழி இதுவரை 3 கோடியே 70 லட்சம் வெள்ளி
விற்பனை பதிவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.








