ஷா ஆலம், ஜூன் 2: நேற்று முதல் RM150,000 மதிப்பில் திட்ட மானியங்களை வழங்கும் ஆர்வத்தை தூண்டும் 'பிச்சிங் டூரிசம்' சிலாங்கூர் 2023 போட்டியில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப் படுகிறார்கள்.
இப்போட்டியின் மூலம், பங்கேற்பாளர்கள் நிலையான சுற்றுலா என்ற கருப்பொருளுடன் திட்ட ஆவணங்களை உருவாக்க வேண்டும் என்று சுற்றுலா சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ருல் ஷா முகமட் கூறினார்.
"மூன்றாவது முறையாக இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு பாலின சமத்துவம், பொருளாதார வளர்ச்சி, தரமான கல்வி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளுக்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
"சிலாங்கூரின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் கருத்துகள் இருக்க வேண்டும். மேலும் அவை சிலாங்கூரை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்கத்துடன் மலாய் மொழி அல்லது ஆங்கிலத்தில் வழங்கப் படலாம்" என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இப்போட்டி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை தனிநபர் மற்றும் குழு (ஒரு குழுவில் அதிகபட்சம் நான்கு பேர்) முறை ஆகும். மேலும், சிலாங்கூர் மாநிலத்தில் மட்டுமே திட்டமிடப்பட்டு செயல் படுத்தப்படும் திட்டங்கள் இருக்க வேண்டும் என அஸ்ருல் ஷா கூறினார். ஜூலை 2 க்கு முன் அனைத்து ஆவணங்களும் சமர்பிக்கப்பட வேண்டும்.
இந்தப் போட்டியைப் பற்றிய கூடுதல் தகவல்களை Selangor.Travel என்ற இணையதளத்தில் அல்லது industry@tourismselangor.my என்ற மின்னஞ்சல் மூலம் பெறலாம்.
கடந்த ஆண்டு, பத்து வெற்றியாளர்களுக்கு பாரம்பரியம், கலை, ஊடகம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சுற்றுலா மற்றும் படைப்புத்திறன் துறை என்ற கருப்பொருளுடன் 100,000 திட்ட மானியம் வழங்கப்பட்டது.








