ஷா ஆலம், பிப் 28- பொது சுகாதாரத்தை வலுப்படுத்த மாநில அரசு தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளது. இந்நோக்கத்திற்காக அது மாநிலத்தின் மொத்த வரவு செலவுத் திட்டத்தில் ஐந்து விழுக்காட்டை சுகாதாரத் திட்டங்களுக்குச் செலவிடுகிறது.
சொந்த நிதியின் வாயிலாகவும் மத்திய அரசின் உதவியின் வழியாகவும் பெரிய அளவிலான தொகையைப் பொது சுகாதாரத்திற்குச் செலவிடும் மாநிலமாகச் சிலாங்கூர் விளங்குகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சுகாதார நோக்கங்களுக்காக மாநில அரசு மொத்த வரவு செலவுத் திட்டத்தில் நான்கு முதல் ஐந்து விழுக்காடு வரை செலவிடுவதாக ஐ.நா.வும் உலகச் சுகாதார நிறுவனமும் கருத்தை வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாகத்தான் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நாம் கோவிட்-19 சோதனை இயக்கங்களையும் சுயமாகத் தடுப்பூசித் திட்டத்தையும் அமல்படுத்த முடிந்தது. மத்திய அரசின் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தவிர்த்து நாம் சுயமாகத் தடுப்பூசிகளை வாங்கி அவற்றை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினோம் என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகளை உள்ளடக்கிய பொது சுகாதாரத் திட்டங்களுக்காக இவ்வாண்டு 6 கோடியே 56 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாகக் கடந்தாண்டு நவம்பர் மாதம் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது மந்திரி புசார் கூறியிருந்தார்.
மக்களின் சுகாதாரம் மீது மாநில அரசு தீவிரக் கவனம் செலுத்தி வருவதாகக் கூறிய அவர், இந்நோக்கதிற்காக ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.








