கோம்பாக், பிப் 23- எதிர்வரும் மே மாதம் தொடங்கி மாநில அரசின் அத்தியாவசியப் பொருளின் மலிவு விற்பனையில் கலந்து கொள்வோருக்கு 5,000 மறுபயனீட்டு பைகளை விநியோகிக்கக் குவாங் சட்டமன்றத் தொகுதி திட்டமிட்டுள்ளது.
மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பிளாஸ்டிப் பை பயன்பாடு இல்லாப் பிரச்சார இயக்கத்தை வெற்றியடையச் செய்வதற்கும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சலாசியா டிசா கூறினார்.
பயனீட்டாளர்களுக்கு ஏ3 அளவிலான பைகளை விநியோகிக்கத் தாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதற்கான வடிவமைப்பு தயாராகி விட்டது. மானியம் கிடைத்தவுடன் அந்த பைகளைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றார் அவர்.
வரும் மார்ச் மாதத் தொடக்கத்தில் இந்த பைகளைப் பொது மக்களுக்கு விநியோகிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். மலிவு விற்பனை நடைபெறும் இடங்களுக்கு அவர்கள் இந்த பைகளை உடன் கொண்டுச் செல்லலாம் என அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள் அஸாலியா கோர்ட் தாசேக் புத்ரி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையின் போது அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கு முன்னர் இந்த தொகுதி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் இத்தகைய மறுபயனீட்டுப் பைகள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள பிளாஸ்டிக் பை பயன்பாடு இல்லா இயக்கத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஏதுவாக பொருள்களை வாங்க வருவோர் பைகளை உடன் கொண்டு வருமாறு சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் முன்னதாகக் கேட்டுக் கொண்டது.








