கோம்பாக், பிப் 22- குவாங் சட்டமன்றத் தொகுதி நிலையில் நடைபெற்ற ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் கோழி மற்றும் முட்டை ஆகியவை பொது மக்களின் அதிக தேர்வுக்குரிய பொருள்களாக விளங்கின.
மலிவு விற்பனை நடைபெறும் ஒவ்வொரு முறையும் இவ்விரு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருவதாகச் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் தோட்டப் பிரிவு நிர்வாகி டேனியர் மர்ஜூக்கி யாசின் கூறினார்.
மலிவு விற்பனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் கோழி மற்றும் முட்டை ஆகியவை உடனடியாக விற்றுத் தீர்ந்து விடுகின்றன. அனைத்து இடங்களிலும் நடைபெறும் மலிவு விற்பனைகளில் பொது மக்களின் தேர்வுக்குரியவையாக இவ்விரு பொருள்களும் கட்டாயம் இடம் பெறுகின்றன என்றார் அவர்.
இன்று மலிவு விற்பனை தொடங்கிய நாற்பதே நிமிடங்களில் 300 கோழிகளும் 200 தட்டு முட்டைகளும் விற்றுத் தீர்ந்து விட்டன என்று சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.
தாசேக் புத்ரி அஸாலியா கோர்ட் பகுதியில் காலை மணி 10.00 தொடங்கி நடைபெற்ற இந்த மலிவு விற்பனையில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொருட்களை வாங்கினர்.
இந்த விற்பனையில் கோழி 10.00 வெள்ளிக்கும் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 10 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.








