கோலாலம்பூர், பிப் 17- சிலாங்கூர் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் தேசிய முன்னணிக்கும் (பாரிசான் நேஷனல்) இடையிலான தொகுதி பங்கீடு வரும் மார்ச் மாதம் தொடக்கத்தில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பில் முடிவெடுப்பதற்காக ஹராப்பான் கூட்டணி அடுத்த வாரம் தேசிய முன்னணியுடன் சந்திப்பு நடத்தவுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியதாக ஃபிரி மலேசிய டுடே இணைய ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியைப் பொறுத்த வரை நாம் கடந்த 2021ஆம் ஆண்டிலேயே தொகுதி பங்கீட்டை உறுதி செய்து விட்டோம். ஆனால், இப்போது பாரிசான் என்ற புதிய அங்கம் சேர்ந்துள்ளது. ஆகவே, மறுபடியும் பேச்சு நடத்த வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அடுத்த வார தொடக்கத்தில் பாரிசானுடன் நாங்கள் பூர்வாங்க சந்திப்பை நடத்தவுள்ளோம். அதன் பின்னர் பேச்சுவார்தை தொடங்கும். இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இப்பேச்சுக்கள் முழுமை பெறும் என எதிர்பார்க்கிறோம் என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.








