சிப்பாங், பிப் 17: இங்குள்ள ஜெண்டராம் ஹிலிரில் உள்ள சுங்கை செமினி நீர்த்தேக்கம் (குளம் சி) இந்த அக்டோபரில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்வழி சுமார் 1.2 மில்லியன் பயனர்கள் பயனடைவார்கள்.
நீர் உத்தரவாதத் திட்டத்தின் (SJAM) கீழ் உள்ள இந்த நீர்த்தேக்கம் சம்பந்தப்பட்ட பகுதியில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால் ஐந்து நாட்கள் வரை அச்சூழ்நிலையைச் சமாளிக்க உதவும் என்று உள்கட்டமைப்பு எஸ்கோ தெரிவித்துள்ளது.
"வழக்கமாகச் சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் (LRA) ஆற்றில் இருந்து நேரடியாக நீரைப் பெறுகிறது. ஆனால் ஆற்றில் மாசு ஏற்பட்டால் இந்த நீர்த்தேக்கத்தைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
"மாசு ஏற்படும் போது அதைக் கண்டறிந்து, ஆற்று நீரை எல்.ஆர்.ஏ-க்கு வரவிடாமல் தடுத்து, நீர்த்தேக்க நீரைப் பயன்படுத்தலாம்,`` என்று ஐ ஆர் இஷாம் அசிம் கூறினார்.
இஷாமின் கூற்றுப்படி, புத்ராஜெயா, பூச்சோங் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சிலாங்கூரின் மொத்த நீர் விநியோகத்தில் சுமார் 12 சதவீதத்தைச் செமினி நீர்த்தேக்கம் கொண்டுள்ளது.
தற்போது 85 மில்லியன் ரிங்கிட் செலவில் இத்திட்டம் 54 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார். சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை லங்காட்டில் மூல நீர் ஆதாரங்கள் மாசுபடுவதால், நீர் விநியோகப் பிரச்சனைக்குத் தீர்வு காண மாநில அரசு இத்திட்டத்தை உருவாக்கியுள்ளது.








