கோல சிலாங்கூர், பிப் 16- ஈஜோக் வட்டாரத்தில் லைசென்ஸ் இன்றி சட்டவிரோதமாகச் செயல்பட்ட மறுசுழற்சி தொழிற்சாலைக்கு எதிராக கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் நேற்று அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த தொழிற்சாலைக்கு எதிராக கடந்த மாதம் 19ஆம் தேதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொழிற்சாலைக்கு எதிரான இந்த இரண்டாவது சோதனை நடவடிக்கையை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக அமலாக்கப் பிரிவினர் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.
இந்த தொழிற்சாலை மீது கடந்த மாதம் 19 ஆம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் அமலாக்கப் பிரிவுத் இயக்குநர் முகமது லுத்பி ஹூடின் கூறினார்.
அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் தன்மூப்பான முறையில் மறுபடியும் செயல்பட்டது பொது மக்களின் புகார் மற்றும் நகராண்மைக் கழகத்தின் உளவு நடவடிக்கையில் கண்டறியப்பட்டது என்றார் அவர். அந்த தொழிற்சாலையில் முன்பை விட அதிகான பொருள்கள் குறிப்பாகப் பேட்டரிகள், வெண்கலம் மற்றும் கணினி உபரி பாகங்கள் மறுசுழற்சி செய்யப்படுவது இச்சோதனையில் கண்டறியப்பட்டது என்று அவர்
தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில் இரு ஜெனரேட்டர் இயந்திரங்கள், போர்க்லிப்ட் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து 2007ஆம் ஆண்டு வர்த்தக மற்றும் தொழில் துறை துணைச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.








