அம்பாங், பிப் 16- உழைப்பின் அருமையை அறுவடை வடிவத்தில் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் மகத்தான திருநாளாகப் பொங்கல் விழா விளங்குகிறது.
ஒவ்வோராண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழாவில் இந்நாட்டிலுள்ள பல்லின மக்களும் கலந்து கொள்வது தனித்துவமிக்க அம்சமாக கருதப்படுகிறது.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டு பொங்கல் விழாவை அம்பாங் நாடாளுமன்றத் தொகுதி சேவை மையம் பரிவு மற்றும் சமூக நல்வாழ்வு சங்கத்துடன் இணைந்து இங்குள்ள டேசா லெம்பா பெர்மாய் எம்.பி.ஏ.ஜே. மண்டபத்தில் நடத்தியது.
இந்த நிகழ்வில் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத் துறைக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ரோட்சியா இஸ்மாயில் கலந்து சிறப்பித்தார்.
இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு கோலப் போட்டி, தோரணம் பின்னுதல், உறியடித்தல், பொங்கலிடுதல், மலர் தொடுத்தல் உள்ளிட்ட போட்டிகளோடு அதிர்ஷ்டக் குலுக்கும் இடம் பெற்றது.
இந்நிகழ்வையொட்டி ஊழியர் சேம நிதி வாரியம் மற்றும் மை சலாம் முகப்படங்களும் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு உரிய விளக்கங்கள் வழங்கப்பட்டன.








