ஷா ஆலம், பிப் 16- சீருடைப் பணியாளர்களின் சேவையைப் போற்றும் விதமாக அரசு துறை சார்ந்த பணியாளர்களுக்காகச் சிறப்பு மலிவு விற்பனைத் திட்டத்தைத் தெராத்தாய் சட்டமன்றத் தொகுதி நேற்று முதன் முறையாக ஏற்பாடு செய்தது.
நேற்று காலை 9.30 மணி தொடங்கி பண்டான் இண்டா தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையில் காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டு பொருள்களை வாங்கினர்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட இந்த விற்பனையில் 500 தட்டு முட்டைகள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் ஒன்றரை மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்ததாகத் தெராத்தாய் தொகுதி ஒருங்கிணைப்பாளர் எலிஸ் டான் கூறினார்.
பொது அமைதியை உறுதி செய்வதற்கும் மக்களின் சுபிட்சத்திற்கும் நேரம் காலம் பாராது பணியாற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சீருடைப் பணியாளர்களின் சேவையைப் போற்றும் வகையில் இந்த சிறப்பு மலிவு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.
பண்டான் இண்டா போலீஸ் நிலையமும் பண்டான் இண்டா தீயணைப்பு நிலையமும் அருகருகே உள்ளது மற்றும் இவ்விரு நிலையங்களிலும் ஊழியர் குடியிருப்புகள் அமைந்துள்ளது. அதனால், தீயணைப்பு நிலைய வளாகத்தில் இந்த விற்பனையை நடத்த நாங்கள் முடிவு செய்தோம் என்றார் அவர்.








