ஷா ஆலம், பிப் 15- புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் தரம் உயர்த்தப்பட்ட மாநில அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலான ஜெலாஜா கித்தா சிலாங்கூர் திட்டத்தை மாநில அரசு மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.
முன்பு ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் என அழைக்கப்பட்ட இத்திட்டத்தின் இவ்வாண்டிற்கான முதல் நிகழ்வு கிள்ளான், ஸ்ரீ பெராந்தாவ் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வரும் சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
உலு சிலாங்கூர் மாவட்ட நிலையிலான நிகழ்வு மறுநாள் ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பத்தாங் காலி, ஓவாசிஸ் பகுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கித்தா சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் ஒரு நாள் நிகழ்வாகப் பல்வேறு ஜனரஞ்சக அங்கங்களுடன் நடத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.
இந்த மக்கள் நலத் திட்ட அறிமுக நிகழ்வு கடந்தாண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இதில் இலவச மருத்துவ முகாம், அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை, கண்காட்சி, விளையாட்டு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம் பெற்றன.








