கோல சிலாங்கூர், பிப் 15- டிங்கில் சுரங்க மற்றும் ஈயக்கப்பல் அருங்காட்சியகம் அடுத்தாண்டுவாக்கில் பூர்த்தியாகும் என்று கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பெர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.
இந்த அருங்காட்சியகத்தை நிர்வகிக்கும் பொறுப்பைச் சிப்பாங் நகராண்மைக் கழகம் ஏற்றுள்ளதாகவும் அக்கப்பலைத் தயார் படுத்தும் பணியில் அது தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
அந்த அருங்காட்சியகத்தை உருவாக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள முடியும் என நாங்கள் நம்புகிறோம். அதனைத் தொடர்ந்து யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி,கலாசார மற்றும் அறிவியல் அமைப்பின் அங்கீகாரத்தை இந்த அருங்காட்சியகம் பெறுவதற்கான வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.
நேற்று இங்குள்ள பாம்பரிய விளையாட்டு அருங்காட்சியகத்தைத் தொடக்கி
வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். டெங்கிலில் உள்ள சுமார் 6,000 டன் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய ஈயக்கப்பலை மாநில அரசு சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் வாயிலாக ஒரு கோடி வெள்ளிக்குக் கடந்தாண்டு ஜூன் மாதம் வாங்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கு ஏதுவாக இந்த ஈயக் கப்பலை அருங்காட்சியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








