கிள்ளான், பிப் 14- கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு தாய் உள்பட குடும்பத்தில் மூவரைப் பறிகொடுத்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு அவருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் பிரிவைத் தாங்காமால் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் கட்டிடத்திலிருந்து விழுந்ததால் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அம்மாணவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட அந்த மாணவரை மருத்துவமனையில் சென்று கண்ட செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், அவருக்கு ஆறுதல் கூறியதோடு சிசிச்சைக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு தாய், பாட்டி மற்றும் தாத்தா ஆகியோரை பறிகொடுத்த துயரம் மற்றும் எஸ்.பி.எம். தேர்வை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஆகியவற்றால் ஏற்பட்ட மன அழுத்தம் அம்மாணவரை நிலைகுலையச் செய்து விட்டதாகக் குணராஜ் தெரிவித்தார்.
மன அழுத்தப் பிரச்சனையைச் சாதாரணமாகக் கருத வேண்டாம் என பொது மக்களைக் கேட்டுக் கொண்ட அவர், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இத்தகைய பிரச்சனைகளை எதிர்நோக்கினால் மருத்துவர்களை அணுகி அல்லது மாநில அரசின் “மெண்டல் சிஹாட்“ திட்டத்தின் வாயிலாக உரிய ஆலோசகச் சேவையைப் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
இத்தகைய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு டாக்டர் சித்தி மரியா மாமுட் தலைமையிலான பொது சுகாதார ஆட்சிக்குழுவின் கீழ் இலவச மனநல சிகிச்சை உள்பட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட மாணவருக்கு உளவியல் ரீதியாகவும் மனோரீதியாகவும்
பல்வேறு உதவிகளை நல்கிய மருத்துவமனை நிர்வாகத்திற்கும் சிலாங்கூர் சுகாதார தன்னார்வலர் குழுவினருக்கும் (சுக்கா செந்தோசா) தாம் நன்றி தெரிவித்துக கொள்வதாகவும் குணராஜ் குறிப்பிட்டார்.








