ஷா ஆலம் ஜன 11- ஒற்றுமை தொடர்பான நிகழ்ச்சிகள், இயக்கங்கள்
மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் சங்கங்கள்,
நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் சிலாங்கூர் அரசின்
மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இருபதாயிரம் வெள்ளி வரை மானியம் பெறுவதற்கு வகை செய்யும்
இத்திட்டத்திற்கு இம்மாதம் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யும்படி
ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா
மாமுட் கேட்டுக் கொண்டார்.
மொத்தம் 250,000 வெள்ளி நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட இந்த “கித்தா
சிலாங்கூர்“ ஒற்றுமை மானியத்திற்கு நேற்று தொடங்கி வரும் ஜனவர
20ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அவர்
சொன்னார்.
ஒற்றுமையை வலுப்படுத்துவது தொடர்பான தகவல்களை பல இன
மற்றும் பின்னணியைக் கொண்ட மக்களை உள்ளடக்கிய திட்டங்கள்
மற்றும் முன்னெடுப்புகள் மூலம் பரப்புவதை நோக்கமாக கொண்டு இந்த
திட்டத்தை ஒற்றுமைத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு வாயிலாக
மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஒற்றுமை தொடர்பான திட்டங்களை முன்னெடுப்பதற்கு 10,000 முதல் 20,000
வெள்ளி வரை மானியம் கோரி விண்ணப்பம் செய்யலாம். அந்த
விண்ணப்பங்கள் மானிய மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டு தகுதி உள்ள அமைப்புகளுக்கு மானியம் வழங்கப்படும்
என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்த மானியத்திற்கான விண்ணப்ப பாரங்களை bit.ly/permohonan-Geran-
Perpaduan-Kita-Selangor எனும் இணையத் தளம் வாயிலாக பதிவிறக்கம்
செய்யலாம். இதன் தொடர்பான மேல் விபரங்களைப் பெற விரும்புவோர்
mpiselangor@gmail எனும் மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம்.
இந்த மானியத்திற்கு விண்ணப்பிக்கும் சங்கங்கள் அல்லது அரசு சாரா
அமைப்புகள் ஒற்றுமை தொடர்பான தங்களின் நிகழ்ச்சிகள் குறித்த திட்ட
அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.








