அம்பாங் டிச 22- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மேற்கொண்டு
வரும் அடுத்தாண்டிற்கான வர்த்தக லைசென்ஸ்களைப் புதுப்பிக்கும்
நடவடிக்கையில் டிசம்பர் 20ஆம் தேதி வரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட
வர்த்தக ஸ்தபானங்கள் தங்கள் வர்த்தக லைசென்சைப் புதுப்பித்துள்ளன.
மொத்தம் 4,959 வர்த்தக வளாகங்களுக்கான லைசென்ஸ்களும் 2,426
அங்காடி வியாபார லைசென்ஸ்களும் அக்காலக்கட்டத்தில்
புதுப்பிக்கப்பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் முகமது பவுசி
முகமது யாத்திம் கூறினார்.
இந்த லைசென்ஸ் புதுப்பிப்பு நடவடிக்கையின் வாயிலாக நகராண்மைக்
கழகம் இதுவரை 35 லட்சம் வெள்ளியை கட்டணமாக வசூலித்துள்ளது
என்று அவர் குறிப்பிட்டார்.
தாமதமாக லைசென்சை புதுப்பிப்பதற்கு விதிக்கப்படும் 360 வெள்ளி
அபராதத் தொகையைச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்கு வரும் ஜனவரி
முதல் தேதிக்குள்ள லைசென்ஸ் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ளும்படி
வர்த்தக லைசென்ஸ் உரிமையாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
லைசென்ஸ் புதுப்பிப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதன் மூலம்
அபராதங்களைச் செலுத்துவதைத் தவிர்க்கும்படி சம்பந்தப்பட்டவர்களைக்
கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் சொன்னார்.
நேற்று இங்கு நடைபெற்ற மினி வர்த்தக லைசென்ஸ் புதுப்பிப்பு விழாவில்
உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
முதன் முறையாக நடைபெற்ற இந்த விழாவில் 300க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர். வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்கள் தங்கள்
லைசென்ஸ்களை விரைந்து புதுப்பிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த
விழாவுக்கு நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.








