குவாந்தான், செப் 23- கெந்திங் ஹைலண்ட்சில் சிறுவன் ஒருவனைக் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதை சித்தரிக்கும் காட்சி டிக் டாக் செயலி வாயிலாக பரவலானதைத் தொடர்ந்து அச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக இரு வெளிநாட்டுப் பெண்களை போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் உள்நாட்டவரான அச்சிறுவனின் தந்தை புகார் செய்த இரு தினங்களுக்குப் பின்னர் அதாவது நேற்று முன்தினம் 42 மற்றும் 50 வயதுடைய அவ்விரு பெண்களும் கைது செய்யப்பட்டனர் என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரண்ட். ஜைஹான் முகமது கஹார் கூறினார்.
கடத்தல் முயற்சி தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 363/511 பிரிவின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.
சிறுவன் ஒருவனைக் கடத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதை சித்தரிக்கும் 20 விநாடி டிக் டாக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.


