ஷா ஆலம், ஆக 22- கிள்ளான், ஜாலான் பாவால் தம்பாக், தாமான் ஸ்ரீ காடோங்கில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பின்னிரவு 12.22 மணியளவில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், உள்ளூர் நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டதாக கிள்ளான் செலாத்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட அந்த 41 வயது நபர் மீது கடத்தல் உள்பட 10 கடும் குற்றப் பதிவுகள் உள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார்.
ஒரு வீட்டின் அருகே சாலையோரத்தில் நின்ற பாதிக்கப்பட்ட நபரை நிசான் அல்மிரா காரில் வந்த மூவர் அணுகிய காட்சி சம்பவ இடத்திலுள்ள இரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது என்று அவர் கூறினார்.
அதன் பிறகு அந்த மூன்று பேரும் அவ்வாடவரை நோக்கி கைத்துப்பாக்கியால் ஐந்து முதல் எட்டு முறை சுட்டனர். அதோடு நிற்காமல் அவரை பாராங் கத்தியால் வெட்டியப் பின்னர் காரில் அதே காரில் ஏறி தப்பியோடினார் என்றார் அவர்.
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் (ஐ.பி.கே.) குற்றப் புலனாய்வுத் துறையின் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டதாகவும் விசாரணைக்கு உதவும் சில பொருட்களை சம்பவ இடத்தில் கைப்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இது குறித்து தகவல்கள் அறிந்தவர்கள் புலனாய்வு அதிகாரி ஏஎஸ்பி முகமது சியாஹ்ரிர் ஜாபிடியை 012-2665 0895 என்ற எண்ணிலோ அல்லது கிள்ளான் செலாத்தான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-33762222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார்.


