கோலாலம்பூர், ஆக 17- திரங்கானு எஃப்.சி. மற்றும் ஜோகூர் டாருள் தக்ஸிம் (ஜே.டி.டி.) இடையிலான எஃப்.ஏ. கிண்ண இறுதியாட்டம் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நடைபெறும்.
மலேசிய விளையாட்டரங்க கழகத்திடமிருந்து நேற்று அனுமதி கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து இறுதியாட்டம் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடத்தப்படுவதாக மலேசிய கால்பந்து லீக் (எம்.எஃப்.எல்.) அறிக்கை ஒன்றில் கூறியது.
எஃப்.ஏ. கிண்ணப் போட்டியின் 32 வது இறுதியாட்டத்தை நடத்துவது தொடர்பில் திரங்கானு மற்றும் ஜோகூர் கால்பந்து சங்க நிர்வாகிகள் மலேசிய கால்பந்து லீக்குடன் இணைந்து திடலை ஆய்வு செய்தப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எம்.எஃப்.எல். தலைமை செயல்முறை அதிகாரி ஸ்டுவர்ட் ராமலிங்கம் கூறினார்.
தற்போதைக்கு 80,000 விளையாட்டாளர்கள் அமரக் கூடிய வசதியையும் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்ட ஒரே அரங்கமாக புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் விளங்குகிறது. எஃப்.ஏ. கிண்ண இறுதியாட்டத்தைக் காண இரு மாநிலங்களிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான வருவர் என்பதால் இப்போட்டிக்கு இந்த அரங்கைப் பயன்படுத்துவது அவசியமாகிறது என்றார் அவர்.


