கோத்தா பாரு, ஜூலை 30- கடந்த புதன் கிழமை தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட மின் தடையினால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக வணிகர்கள் கட்டணக் கழிவு கோரி தெனாகா நேஷனல் நிறுவனத்திடம் (டி.என்.பி.) விண்ணப்பிக்கலாம்.
அந்த மின் தடை காரணமாக குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்துறையை உள்ளடக்கிய சுமார் பத்து லட்சம் பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டதாக எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தாக்கியுடின் ஹசான் கூறினார்.
இந்த மின் தடை காரணமாக பாதிக்கப்பட்ட வணிகர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு எனக் கூறி கோரிக்கையை முன்வைக்கலாம் என அவர் தெரிவித்தார்.
எனினும், அந்த கட்டணக் கழிவு தொடர்பான துல்லியமான தகவல்களை வரும் ஆகஸ்டு 4 ஆம் தேதி தாம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அவர் சொன்னார்.
இன்று இங்கு நடைபெற்ற கோத்தா பாரு பாஸ் கட்சியின் 55வது பேராளர் மாநாட்டிற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மின் தடை ஏற்பட்ட பகுதிகளில் 2 மணி 21 நிமிடங்களில் மீண்டும் மின் விநியோகத்தை ஏற்படுத்திய டி.என்.பி. நிறுவனத்தின் நடவடிக்கையை தாம் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக அன்றைய தினம் நாம் அதிக மின் தேவை இல்லாத பகுதிகளிலிருந்து மின் பகிர்வு முறையை அமல் செய்தோம். அதே சமயம், மருத்துவமனைகள், விமான நிலையங்கள் மற்றும் மக்களவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நாடாளுமன்றக் கட்டிடம் ஆகியவற்றில் மின் தடை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்தோம் என்றார் அவர்.








