ஷா ஆலம், ஜூலை 18- கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்.எச்.17 விமானத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இன்று நாடாளுமன்றத்தில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த இரங்கல் நிகழ்வு நடத்தப்படுவதாக மக்களவை தொடங்கப்படுவதற்கு முன்னர் சபாநாயகர் டத்தோ அஸார் அஜிசான் ஹருண் கூறினார்.
அந்த கோரச் சம்பவம் குறித்து நானும் அவை உறுப்பினர்களும் மிகுந்த வேதனையடைகிறோம். எம்.எச். விமானத்தின் விமானி, சிப்பந்திகள் மற்றும் பயணிகளின் குடும்பத்தினருக்கு இவ்வேளையில் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
பின்னர் அவர் உறுப்பினர்கள் அல்-பத்திஹா ஓதும்படியும் முஸ்லீம் அல்லாத உறுப்பினர்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தும்படியும் கேட்டுக் கொண்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி ஆம்ஸ்டர்டெமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அந்த விமானம் உக்ரேனின் கிழக்கு வான் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்சம்பவத்தில் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட 298 பேரும் உயிரிழந்தனர்.








