ECONOMY

ஜூலை முதல் தேதி முதல் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகை, கோழிக்கான உச்சவரம்பு விலை ரத்து

22 ஜூன் 2022, 9:31 AM
ஜூலை முதல் தேதி முதல் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகை, கோழிக்கான உச்சவரம்பு விலை ரத்து

ஷா ஆலம், ஜூன் 22- போத்தல்களில் அடைக்கப்பட்ட அசல் சமையல்  எண்ணெய்க்கான உதவித் தொகையை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு எடுத்ததற்கு அத்தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் வணிகர்களும் முறைகேட்டில் ஈடுபட்டதே காரணம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இந்த உதவித் தொகையினால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டிய செலவுத் தொகையின் மதிப்பு கடந்தாண்டு 250 கோடி வெள்ளியாக இருந்த வேளையில் இவ்வாண்டு அது 400 கோடி வெள்ளியாக உயர்ந்து விட்டதாக அவர் சொன்னார்.

சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகை திட்டத்தில் முறைகேடுகள் நிகழ்வது கண்டறியப்பட்டுள்ளது. அரசாங்கம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாத பட்சத்தில் அந்த உணவுப் பொருளுக்கு இனியும் உதவித் தொகை வழங்குவதில் அர்த்தமில்லை என்று அவர் தெரிவித்தார்.

எனினும், மாதம் ஒன்றுக்கு 60,000  மெட்ரிக் டன் என்ற அடிப்படையில் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட ஒரு கிலோ சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், நாடு எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்தில் நுழைந்துள்ள வேளையில் போத்தல்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கு இனியும் உதவித் தொகை வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.