கோலாலம்பூர், ஜூன் 7- “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 12 லட்சத்து 2 ஆயிரத்து 212 பேர் அல்லது 33.9 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
மேலும் 48.9 விழுக்காட்டுச் சிறார்கள் அல்லது 17 லட்சத்து 33 ஆயிரத்து 437 பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
பன்னிரண்டு முதல் 17 வயது வரையிலான இளையோரில் 93.7 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 14 ஆயிரத்து 535 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர். மேலும், 96.8 விழுக்காட்டினர் அல்லது 30 லட்சத்து 9 ஆயிரத்து 343 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாட்டிலுள்ள பெரியவர்களில் 1 கோடியே 61 லட்சத்து 6 ஆயிரத்து 736 பேர் அல்லது 68.5 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
மேலும், 2 கோடியே 29 லட்சத்து 81 ஆயிரத்து 115 பேர் அல்லது 97.7 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 98.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 32 லட்சத்து 58 ஆயிரத்து 115 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று நாடு முழுவதும் 1,904 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 176 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 1,287 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 441 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.
இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 7 கோடியே 9 லட்சத்து 91 ஆயிரத்து 146 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, நாட்டில் நேற்று கோவிட்-19 தொடர்புடைய இரு மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.


