ECONOMY

கை,கால், வாய்ப்புண் நோய்க்கான அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்குவீர்

18 மே 2022, 8:04 AM
கை,கால், வாய்ப்புண் நோய்க்கான அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்குவீர்

புத்ரா ஜெயா, மே 18- கை,கால், வாய்ப்புண் நோய்க்கான அறிகுறியை தங்கள் பிள்ளைகள் கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி பெற்றோர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நோய் கண்டவர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்றைப் போலவே காய்ச்சல் மற்றும் உடலில் அரிப்பு ஏற்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

எந்த அறிகுறி தென்பட்டாலும் பிள்ளைகளை சோதனைக்காக உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு  கொண்டுச் செல்ல வேண்டும். கோவிட்-19 நோய்த் தொற்றா? அல்லது கை,கால்,வாய்ப்புண் நோயா? என்பதை பிறகு அறிந்து கொள்ளுவும் என்றார் அவர்.

இங்குள்ள புத்ரா ஜெயா மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற சுகாதார அமைச்சின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கை,கால்,வாய்ப்புண் நோய் அதிகரிப்பு கவலையளிக்கும் வகையில் உள்ளதாக கூறிய கைரி, இவ்விவகாரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மாநில சுகாதார துறைகள் பணிக்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்த தகவலை பொதுமக்கள் மத்தியில் பரப்பும்படி மாவட்ட சுகாதார இலாகாக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

இந்நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக தங்கள் இடங்களில் சுத்தத்தை பேணி காக்கும்படி சிறார் பராமரிப்பு மைய நடத்துநர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் அதே காலக்கட்டத்தில் இந்நோய் கண்டவர்களின் எண்ணிக்கை 15 மடங்கு அதிகரித்து 31,661 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.