ECONOMY

நோன்புப் பெருநாளின் போது நெடுஞ்சாலையைக் கண்காணிக்கும் பணியில் 520 ரோந்து குழுவினர்

21 ஏப்ரல் 2022, 4:07 AM
நோன்புப் பெருநாளின் போது நெடுஞ்சாலையைக் கண்காணிக்கும் பணியில் 520 ரோந்து குழுவினர்

கோலாலம்பூர், ஏப் 21- நோன்புப் பெருநாளை முன்னிட்டு இம்மாதம் 29 ஆம் தேதி முதல் மே மாதம் 9 ஆம் தேதி வரை நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை 20 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு பிளஸ் எனப்படும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை நிறுவனம் நெடுஞ்சாலையில் குறிப்பாக அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில் பிளஸ்ரோண்டா ரோந்துக் குழுக்களின் எண்ணிக்கையை 520 ஆக உயர்த்தவிருக்கிறது.

போக்குவரத்து அதிகரிக்கும் காலக்கட்டத்தில் வாகனவோட்டிகள் பாதுகாப்பான மற்றும் சீரான பயணத்தை மேற்கொள்வதை பிளஸ்ரோண்டா குழுவினர் உறுதி செய்யும் அதே வேளையில் நெரிசலில் சிக்கிக் கொள்ளும் வாகனங்களுக்கு உதவும் நடவடிக்கையிலும் ஈடுபடுவர் என்று பிளஸ் நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி டத்தோ ஜக்காரியா அகமது ஜபிடி கூறினார்.

நெடுஞ்சாலைகளில் சிக்கிக் கொள்ளும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு ஏதுவாக முக்கிய இடங்களில் குறிப்பாக மேடான பகுதிகளில் இழுவை வாகனங்களும் கிரேன்களும் தயார் நிலையில் வைக்கப்படும் என்று அவர் சொன்னார்.

அதிக நெரிசல் ஏற்படும் பகுதிகளில் எதிர்த்தடத்தையும் வாகனங்கள் வகை செய்யும் கொண்ட்ரா போக்குவரத்து முறையை போலீசாரின் உதவியுடன் அமல்படுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர போலீஸ், சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே) மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையுடன் தமது தரப்பு இணைந்து பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.