கோலாலம்பூர், ஏப் 18- நாட்டில் 424,000 சிறார்கள் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது 2019 ஆம் ஆண்டு சுகாதாரம் மற்றும் நோய்ப் பீடிப்பு மீதான ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டிலுள்ள சிறார்களிடையே மன நலப் பிரச்னை ஒரு தொற்று நோயாக உருவெடுத்து வருவதை பிரதிபலிக்கும் வகையில் இந்த உயர்ந்த பட்ச எண்ணிக்கை அமைந்துள்ளது.
உலகில் 20 விழுக்காட்டுச் சிறார்கள் மன நலப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு அவர்களில் பெரும்பாலோருக்கு அந்நோய் இருப்பது தெரியாமலும் அதற்கான உரிய சிகிச்சை வழங்கப்படாமலும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது என்று மலேசிய சிறார் மற்றும் இளையோர் மன நலச் சங்கம் கூறியது.
சுமார் 50 விழுக்காட்டு மனநலப் பாதிப்புகள் 14 வயதை அடைவதற்கு முன்னர் ஏற்படும் வேளையில் 75 விழுக்காட்டினருக்கு 20 வயதை அடையும் போது ஏற்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் காட்டுகின்றன என்று அச்சங்கம் தெரிவித்தது.
வரும் 23 ஆம் தேதி அனுசரிக்கப்படவிருக்கும் உலக குழந்தைகள், சிறார்கள் மற்றும் இளையோர் மனநல ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் இச்சங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
மனநல ஆரோக்கியம் பச்சிளங் குழந்தையாக இருக்கும் போதே தொடங்கப்பட வேண்டும். தரமான சுற்றுச்சூழலை உருவாக்குவதன் மூலம் தங்கள் பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் முக்கிய பங்கினை ஆற்ற வேண்டும் என அந்த சங்கம் வலியுறுத்தியது.








