ECONOMY

34,118 பேர் வெள்ள நிவாரண நிதியைப் பெற்றனர்

15 ஜனவரி 2022, 1:11 PM
34,118 பேர் வெள்ள நிவாரண நிதியைப் பெற்றனர்

ஷா ஆலம், ஜன 15- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 34,118 குடும்பங்களுக்கு நேற்று வரை சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளத்தில் உயிரிழந்த கிள்ளான், சிப்பாங், உலு லங்காட், கோல லங்காட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 பேரின் குடும்பத்தினர் தலா 10,000 வெள்ளியைப் பெற்றனர்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில் இந்த விபரங்கள்  இடம் பெற்றுள்ளன.

பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று காலை 10.00 மணி வரை 3 கோடியே 42 லட்சத்து 38 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக 11,236 பேரும்,  கிள்ளானில் 7,376 பேரும், உலு லங்காட்டில் 6,846 பேரும், சிப்பாங்கில் 3,966 பேரும், கோம்பாக்கில் 892 பேரும் உலு சிலாங்கூரில் 93 பேரும் சபாக் பெர்ணமில் 35 பேரும் இந்த உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.

கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழஙகுவதற்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடிப்படை  வசதிகளை சரி செய்வதற்கும் மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை தொடக்கியது.

கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய இந்த நிதி வழங்கும் திட்டம் இம்மாத இறுதியில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.