ECONOMY

9,519 மாணவர்கள் இலவச இணைய தரவு சேவையைப் பெற்றனர்

8 டிசம்பர் 2021, 7:20 AM
9,519 மாணவர்கள் இலவச இணைய தரவு சேவையைப் பெற்றனர்

ஷா ஆலம், டிச 8- சிலாங்கூர் டியூஷன் ராக்யாட் (பி.டி.ஆர்.எஸ்.) திட்டத்தில் பங்கேற்றுள்ள 9,519 மாணவர்கள் சிலாங்கூர் இணைய தரவு திட்டத்தின் கீழ் 12 மாதங்களுக்கு இலவச இணைய சேவையைப் பெறுவர்.

மாணவர்கள் மற்றும் வர்த்தகர்களை இலக்காக கொண்ட இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இலவச இணைய சேவைக்கான சிம் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாணவர்கள் மற்றும் வர்த்தகர்களின் பயன்பாட்டிற்காக இலவச இணைய தரவு சேவைத் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 1 கோடியே 70 லட்சம் வெள்ளி செலவிலான இத்திட்டத்தின் மூலம் 70,000 பேர் பயனடைவர் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று பத்தாங் காலி உறுப்பினர் ஹருமாய்னி ஓமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய அரசு அமல்படுத்தி வரும் “ஒரு குடும்பம், ஒரு மடிக்கணினி“ திட்டத்தை போன்று சிலாங்கூர் அரசு திட்டத்தை அமல்படுத்துமா? என்று ஹருமாய்னி கேள்வியெழுப்பியிருந்தார்.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட “பிந்தாஸ“ எனப்படும் சிலாங்கூர் அடிப்படை தொழில்நுட்ப உபகரண இரவல் திட்டம் மின்னியல் உபகரணங்களைக் கொண்டிராத மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அமிருடின்  சொன்னார்.

பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் பயன்படுத்தாத கணினிகள் மற்றும் மடிக்கணினிகளை சீர்படுத்தி மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.