ECONOMY

“கிஸ்“ திட்ட பயனாளிகள் பட்டியல் மீண்டும் சரிபார்க்கப்படும்- கணபதிராவ் தகவல்

28 ஆகஸ்ட் 2021, 10:38 AM
“கிஸ்“ திட்ட பயனாளிகள் பட்டியல் மீண்டும் சரிபார்க்கப்படும்- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், ஆக 28- கிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்ட பயனாளிகளின் பட்டியல் மீண்டும் சரிபார்க்கப்படவுள்ளது.

தகுதி உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் கூறினார்.

இந்த “கிஸ்“ திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 25,000 இடங்கள் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைக் கொண்டவர்களை கொண்டு நிரப்பப்படுவதை உறுதி செய்ய தாங்கள் விரும்புவதாக அவர் சொன்னார்.

கடந்த ஆகஸ்டு மாதம்ம 5 ஆம் தேதி வரை மொத்தம் 20,371 பேர் “கிஸ்“ திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். அவர்களில் 20,371 பேர் “கிஸ்“ திட்டத்தின் வாயிலாகவும் 1,363 பேர் “கிஸ்-ஐடி“ எனப்படும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான  திட்டத்தின் வாயிலாகவும் பயன்பெற்றனர் என்றார் அவர்.

நேற்று மாநில சட்டமன்றத்தில் மேன்மை தங்கிய சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான முடிவுரையின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொலைபேசி எண்களின் மாற்றம் போன்ற மூத்த குடிமக்கள் பரிவுத் திட்ட (எஸ்.எம்.யு.இ.) உறுப்பினர்கள் தொடர்பான தகவல் புதுப்பிப்பு நடவடிக்கைகள் யாவும் சட்டமன்றத் தொகுதி சேவை மைய நிலையில் மட்டும் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொலைபேசி எண் மாற்றம் தவிர்த்து  இதர தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளை யாவாஸ் அறவாரிய நிலையில் மட்டுமே மேற்கொள்ள இயலும். முறைகேடான வழியில் தகவல்களை மாற்றுவது அல்லது தவறுதலாக தகவல்களைச் சேர்ப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்வை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

உறுப்பினர்களின் இறப்பு தொடர்பான தகவல்கள் யாவாஸ் அறவாரியத்தில் பதிவு  செய்யப்பட வேண்டும் எனக் கூறிய அவர், இதன் மூலம் உண்மையான தகவல் கிடைப்பதை உறுதி செய்யவும் வாரிசுகள் சட்டமன்ற சேவை மையங்கள் வாயிலாக அல்லாமல் தனியாக நிதிக் கோரிக்கையை முன்வைப்பதை தவிர்க்கவும் இயலும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.