ஷா ஆலம், ஜூலை 8- தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் செல்ல பொது போக்குவரத்து சேவையை ஏற்படுத்தியுள்ள சிலாங்கூர் அரசாங்கத்திற்கு பொதுமக்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
அனைவரும் சொந்த வாகன வசதியைக் கொண்டிராத காரணத்தால் மாநில அரசின் இந்த போக்குவரத்து சேவையைத் தாம் வரவேற்பதாக இசாருடின் ஓஸ்மான் (வயது 50) கூறினார்.
தடுப்பூசி செலுத்தும் மையத்திற்குச் செல்ல நான் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையைத் தேர்ந்தெடுத்தேன். இந்த பஸ் சேவை பொதுமக்களுக்கு குறிப்பாக தனியாக இருக்கும் மூத்த குடிமக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
சொந்த வாகன வசதியின்றி பொது போக்குவரத்தை பெரிதும் நம்பியிருக்கும் இத்திட்டம் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது என்று நுர்கியா ஜூசோ (வயது 31) கூறினார்.
பொது போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தி தடுப்பூசி மையங்களுக்குச் செல்வது மிகவும் பாதுகாப்பானதாகும். காரணம் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் வாகனம் ஓட்டும் அளவுக்கு உடல் நிலை அவ்வளவு சீராக இல்லாமல் போகலாம். மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிப்போருக்கு இச்சேவை மிகவும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.
இதனிடையே, ஷா ஆலம், ஐ.டி.சி.சி. மையத்தில் தடுப்பூசி செலுத்த வந்த முகமது அஜிசான் அலியாஸ் (வயது 27), கார் நிறுத்தமிடப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு மாநில அரசின் கட்டணக் கழிவை பயன்படுத்தி கிராப் வாடகை கார் மூலம் தடுப்பூசி செலுத்த வந்ததாகச் சொன்னார்.
இந்த போக்குவரத்து சேவையை பெரிதும் பாராட்டிய விக்கி து (வயது 34), மக்களுக்கு மிகுந்த பலனைத் தரும் இச்சேவை அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்றார்.


