ஷா ஆலம், ஜூன் 5- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மேரு வட்டாரத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் வசதி குறைந்த 130 பேருக்கு உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன.
குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை இலக்காக கொண்ட இத்திட்டம் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து அமல்படுத்தப்பட்டு வருவதாக மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.
சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய், கோதுமை, பீகூன், மிளகாயச் சாந்து, சீனி போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த உணவு பொருள்களை சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று நேரடியாக ஒப்படைக்கிறோம். ஒரு சிலர் நேரடியாக தொகுதி சேவை மையத்திற்கு வந்த பொருள்களை பெற்றுக் கொள்கின்றனர் என்றார் அவர்.
இத்தகைய உதவிப் பொருள்களைப் பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை முழுமையாக வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இத்திட்டம் தொடர்ந்து நடைபெறுவதற்கு ஏதுவாக அரசு சாரா அமைப்புகள் அல்லது தனி நபர்கள் தங்களால் இயன்ற பொருளுதவிகளை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


