புத்ராஜெயா, செப் 5 : இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட 'ஓப்ஸ் பங்கிட் ' அமலாக்க நடவடிக்கையின் கீழ், பொதுவிடங்களில் சிறு குப்பைகளை வீசிய நபர்களுக்கு எதிராக 191 குற்ற எச்சரிக்கை நோட்டிஸ் வெளியிடப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 24 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு , ஊராட்சி வீடமைப்பு அமைச்சு SWCorp திடக் கழிவு நிர்வகிப்பு பொதுத் தூய்மை கழகத்துடன் இணைந்து அந்த அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
பொதுவிடங்கள் எப்போதும் தூய்மையாக இருப்பதை உறுதிச் செய்வதோடு, குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசக் கூடாது எனும் விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அமலாக்க நடவடிக்கையின் போது எச்சரிக்கை நோட்டிஸ் பெற்றவர்களுக்கு ஈராயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்க முடியும்.
கூடுதல் தண்டனையாக 12 மணி நேரம் மக்கள் சேவையில் ஈடுபட உத்தரவிடப்படுவர்.
இந்த அமலாக்க நடவடிக்கையை மேற்கொள்ள, 2007 திடக் கழிவு நிர்வகிப்பு பொதுத் தூய்மை சட்டத்தைக் கடைப்பிடிக்கும் 7 மாநிலங்களில் உள்ள 56 இடங்களில் SWCorp-பின் 234 அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டனர்.





