ஆராவ், பிப் 27 - நாடு தழுவிய ரமலான் சந்தைகளில் உணவு விரயத்தைக் குறைக்கும் பிரச்சாரத்தின் மூலம், இந்த ஆண்டு 100,000 கிலோகிராம் (kg) வரையிலான உபரி உணவை மீட்க திடக்கழிவு மற்றும் பொதுச் சுத்திகரிப்பு நிர்வாகக் கழகம் (SWCorp) இலக்கு கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு 70,000 கிலோகிராமுக்கும் அதிகமான உபரி உணவு மீட்கப்பட்டதன் வெற்றியையும், மக்களிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்டு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என SWCorp-இன் தலைமை நிர்வாக அதிகாரி காலிட் முகமட் கூறினார்.
“கடந்த ஆண்டு 70,000 கிலோகிராமுக்கும் அதிகமான உபரி உணவு குப்பைக் கிடங்குகளுக்குச் செல்வதிலிருந்து வெற்றிகரமாகக் காப்பாற்றப்பட்டது. இது பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 80,000 கிலோகிராம் முதல் 100,000 கிலோகிராம் வரை எட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.
ஆராவு, ரமலான் சந்தையில் நடைபெற்ற 'உணவை மதியுங்கள், விரயத்தைத் தவிருங்கள்' எனும் 2026 ரமலான் பிரச்சாரத்தை தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த பிரச்சாரம், பெர்லிஸ் மாநில அரசு, கங்கார் நகராண்மைக் கழகம் (MPK), மலேசிய சிவில் பாதுகாப்புப் படை (APM) மற்றும் திடக்கழிவு மேலாண்மை நிறுவனமான E-Idaman Sdn Bhd ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.
விற்கப்படாத அல்லது மீதமாகும் உணவுகள் சேகரிக்கப்பட்டு, அரசு சாரா அமைப்புகளின் (NGO) ஒத்துழைப்புடன் தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர் கூறினார்.
“காப்பாற்றப்படும் இந்த உணவுப் பொருட்கள் உண்பதற்கு நல்ல நிலையில் இருப்பதால், தேவைப்படுபவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், மேலும் பல அரசு சாரா அமைப்புகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் எங்களுடன் ஒத்துழைக்க முன்வர வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்க, ரமலான் சந்தைகளில் தூய்மை நிலையை உறுதி செய்வதற்காக SWCorp கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் காலிட் குறிப்பிட்டார்.
இந்த முயற்சிக்கு வியாபாரிகளும் வருகையாளர்களும் நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும், இது ரமலான் மாதம் முழுவதும் தூய்மையை மேம்படுத்தவும் உணவு விரயத்தைக் குறைக்கவும் உதவுவதாகவும் அவர் மேலும் கூறினார்.








