செர்டாங், செப்.3 : மலேசியாவின் விவசாயத் துறையில் இறக்குமதி செய்யப்படும் விதைகளின் மீதான சார்பைக் குறைக்க பல்வேறு உள்ளூர் பயிர் விதை வகைகளை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த முயற்சிகளை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தீவிரப்படுத்தி வருவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளைச் சேர்ந்த விதை வளங்களை அதிகளவில் சார்ந்திருப்பது, விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள், வர்த்தகத் தடைகள் மற்றும் விவசாய பொருட்களின் விலை உயர்வு போன்ற அபாயங்களுக்கு உள்நாட்டு விவசாயத் தொழிலை உள்ளாக்குவதாக அவர் கூறினார்.
தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத விதைகள் பயன்படுத்தப்படும்போது, விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் விவசாயிகளின் வருமானமும் குறையக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு விதைத் தொழிலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பயிர் விதைகளின் தரம் தொடர்பான சட்ட மசோதாவை உருவாக்கும் பணியில் அமைச்சு தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவர் கூறினார்.
அதனுடன், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப நாட்டின் விதைத் தொழிலை மேம்படுத்தும் வகையில், 2004ஆம் ஆண்டு புதிய தாவர வகை பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தச் சட்டத்தின் மூலம் விதைத் தொழிலின் ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியிலும் தரநிலைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய முடியும்.







