உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் உணவுப் பாதுகாப்பு உறுதி - அமைச்சர் முகமட் சாபு

25 மார்ச் 2026, 2:29 AM
உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் உணவுப் பாதுகாப்பு உறுதி - அமைச்சர் முகமட் சாபு

கோலாலம்பூர், மார்ச் 25 - மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் தற்போதைய கடும் வெப்பமான வானிலை ஆகிய சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு (KPKM) தெரிவித்துள்ளது.

இது குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு, உள்நாட்டுச் சந்தையில் வெளிக்காரணிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான தணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் உலகளாவிய எரிபொருள் விலை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், இது இறுதியில் உணவுப் பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில், நாட்டில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றங்கள், உள்நாட்டு விவசாய உற்பத்தித் திறனைப் பாதிக்கக்கூடிய சவால்களாக உருவெடுத்துள்ளதை அவர் கோடிட்டுக் காட்டினார்.

இத்தகைய சூழலை எதிர்கொள்ள விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதிலும், திறமையான மேலாண்மை முறைகளைக் கையாளுவதிலும் அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.

மேலும், ஹரிராயா எடில்பித்ரி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு போதுமான அளவிலும் சீராகவும் இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விவசாய அமைச்சு, உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) மற்றும் பல்வேறு அரசு முகமைகளுடன் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சியே இந்தச் சீரான விநியோகத்திற்குக் காரணம் என்று அவர் பாராட்டு தெரிவித்தார்.

மடாணி அரசாங்கம் எந்தச் சூழ்நிலையிலும் மக்கள் தடையின்றி உணவுப் பொருட்களைப் பெறுவதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாகவும், இந்த இலக்கை அடையத் தொழில்துறையினர், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் முகமட் சாபு அழைப்பு விடுத்துள்ளார்.

அனைவரின் ஒத்துழைப்புடன் நாட்டின் உணவு விநியோகக் கட்டமைப்பை இன்னும் வலிமையானதாகவும் நிலைத்தன்மை கொண்டதாகவும் மாற்ற முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.