சிபு, ஆகஸ்ட் 31: இன்று அதிகாலை பான் போர்னியோ நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 43 பேரில் 23 பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 2.25 மணியளவில் இந்த விபத்து தொடர்பான அவசர அழைப்பு கிடைத்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) சரவாக் செயல்பாட்டு மையப் பேச்சாளர் தெரிவித்தார்.
விபத்தில் எவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளவில்லை என்றும், 23 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
காயமடைந்த அனைவருக்கும் சம்பவ இடத்திலேயே மருத்துவக் குழுவினரால் ஆரம்பகட்ட சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக சிபு மருத்துவமனை மற்றும் கனோவிட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்துக்கான காரணம் வெளியிடப்படவில்லை.







